<>அமெரிக்காவில்
தமிழ் பணி :
வ.ச.பாபு<>
வ.ச.பாபு, சிகாகோவில் வசிப்பவர். ஃபெட்னா எனப்படும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கபேரவையில் பொறுப்புவகிப்பவர். தமிழுக்காக தொண்டாற்றுபவர். தன் நேரத்தைசெலவிடுகின்ற பேராளர்.
தங்கள் வாழ்வாதாரத்துக்காக தாய்த்தமிழகத்திலிருந்து
புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் தமிழர்கள் மத்தியில்
தமிழில் பேசுவதைத் தவிர்த்து அயல்மொழியோடு
ஆலிங்கனம் செய்துகொண்டு ஆடை களைவதைப்
போல களைந்தெறிந்து வாழும் தமிழ்க் குடும்பங்களுக்கு
மத்தியில் தமிழை வளர்க்க, நேசிக்க மழலைகளின்
அதரங்களில் தமிழைத் தவழவிட தன்னார்வ தமிழர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் ஆறுதலான விடயம்!
தமிழன் கடல் கடந்து போனாலும் தன் மொழிப்பற்றை
சிலர் கைவிட்டாலும் சிலர் தாங்கிப்பிடித்து மொழியு
ணர்வை விதைக்கும் விவசாயியாய் அமெரிக்க
மண்ணில் வலம் வருவதில் நெஞ்சு நெகிழ்கிறது!
எந்த ஒரு சமூகமும், எந்தச் சூழலிலும் "மொழி" என்ற
தன் சொந்த அடையாளத்தைத் தொலைத்துவிடக்கூடாது!
தேமதுரத் தமிழ் அமெரிக்கத் தமிழர் இல்லங்களில்,
உள்ளங்களில் வேர் பாய்ச்சி விழுதுகள் விடக்
காரணமானவர்கள் வணக்கத்திற்குரியவர்கள்!
அமெரிக்கத் தமிழர் இல்ல மழலைகள் நேசித்துச்
சுவாசிக்கத் தமிழமுதை விருந்தாக்கியளிக்கும்
தமிழன்பர்களை நாம் நன்றியோடு நினைக்கப்பட
வேண்டியவர்கள்!
வள்ளுவன் எந் நன்றிகொன்றார்க்கும் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு என்கிறதற்கொப்ப அடுத்த தலைமுறைக்கான மொழியுணர்வை வளர்த்தெடுக்கும்
இவர்களை உலகத் தமிழர்களின் பார்வைகளுக்கான
தமிழ்த்தினையில் நேர்காணல் செய்து முன்னிடுகிறேன்.
இவர்கள் தமிழை
தவமாய்,
வேதமாய்,
வேள்வியாய்,
சுவாசமாய்,
உயிராய்,
உணர்வாய் நேசித்து தமிழ் வாழ
வளர தங்களை மெழுகுவர்த்தியாய் ஆக்கிக்கொண்டுள்ள
இவர்கள் குடத்திலிட்ட விளக்காய் இருக்கிறார்கள்!
இவர்களைக் குன்றிலிடும் எளியோனின் அரிய முயற்சி இது!
காலதேவனின் ஓட்டத்தில் கரைந்து மறைந்துவிடாமலிருக்க
இந்தப் பதிவுகள் காலத்தின் கட்டாயம்!
-தமிழ்த்திணைக்காக:- ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ, அமெரிக்கா.
1) தங்களைப்பற்றி ஒரு சிறு குறிப்பு:-பிறந்தது - கொங்கு நாட்டில், கோவையில்.
வளர்ந்தது - சென்னையில்
கற்றது - பொறியியல் (கிண்டி, சென்னை, தமிழ் நாடு)
தொழில் - உற்பத்தி கருவிகள் பழுது (வருமுன் காத்து,
வருவதை கூறுவது) (Preventive and Predictive Maintenance)
புலம் பெயரக் காரணம் - தொழில் வளர்ச்சி மேம்பாடு
(தற்போது நினைப்பது அன்னை மொழிதனை
அயலார்க்கும், வழி தொடரும் தலைமுறையினருக்கும் அறிமுகப்படுத்தல் என்பதே)
2)அமெரிக்காவில் தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டும்
என்ற ஆர்வம் எதனால்? எப்போது ஏற்பட்டது?
ஆர்வத்துக்கு வித்திட்டது எது?
அன்பும், பாசமும் தமிழ் மொழி மீது அமையும்
ஆர்வமும், இனத்தின் மீது படியும் உணர்வும்
"ஓர் வழி" அமைவதுதான்!
அது இயற்கையுங் கூட!
வித்திட்டு வருவதை விட, பதியமிட்டு வளர்வது
என்பது பொருத்தம்!
அப்படிப் பதியமிட்டது பெற்றோரும்,
உடன் பிறந்த மூத்தோர்கள் என்றால், வளர்பருவத்திற்கு
உதவியாய் நின்றவை பள்ளிப்பருவத்து தமிழாசிரியர்களின்
தெளிந்த மொழி ஆளுமையும், பேரறிஞர் அண்ணாவின்
துள்ளுந்தமிழ் நடையுமே !
இப்போது வழிநடத்திச் செல்வது தமிழ்ப்பேரறிஞர்கள்.
(பாவாணர், பாவலரேறு) நூல்களும், தமிழ் நாட்டிலுள்ள
பல தமிழறிஞர்கள் தொடர்பும், உடன் சுமை தாங்கி
பொறுத்துச் செல்லும் துணைவியும், நண்பர்களும் தான்!
3) அமெரிக்காவில் தமிழ் பள்ளிகளைத் துவங்கி
நடத்துவதற்கு தமிழர் பெற்றோர்கள் ஒத்துழைப்பு
எப்படி யுள்ளது?
வாழ்க்கையின் வளங்கள் பல சேர்க்கும் ஆர்வத்துடன்
புலம் பெயர்ந்தோர், மொழி தாங்கி நிற்க எந்தத்
தயக்கத்தையும் காட்டுவதில்லை என்பதே
என் கருத்து!
தம் முன் உள்ள, சுமக்க இயலாத சுமைகளிடையே
அன்னை மொழி காத்து நிற்பதில் அவர்கள் காட்டும்
அக்கறை பாராட்டிற்கு உரியது.
4) தமிழ் பள்ளிகளில் ஒரே மாதிரியான தமிழ்
புத்தகங்களை தமிழகத்தில் இருந்து தருவித்து
நடத்த என்ன காரணம்?
இனமொன்று! மொழியொன்று!
ஆரம்பத்தில் இதனை வழி நடத்திச் செல்ல ஒன்றான
கல்விக்கருவிகள் துணை புரியும் என்ற எண்ணமே!
5) துவக்க நிலை மாணவர்களுக்காக ஆங்கிலம் - தமிழ் விளக்கங்களுடன் ஒரு புத்தகத்தை வடிவமைக்க
முயற்சி ஏதேனும் உண்டா?
ஆங்கிலம் - தமிழ் விளக்கம்
என்பது ஆரம்பத்தில் எளிது என்றாலும், எளியதையும்,
புதியதையும் வாழ்வாகக் கொள்ளும் வழக்கம் மனித
இயற்கை! அதிலும் தமிழர்கள் சற்றே அதிக அளவில்
இதனை மேற்கொள்பவர் என்பதாலும், செயல்
விளக்கங்களும், பொருள் காட்டு விளக்கங்களும்
மொழி கலப்பைத் தவிர்க்கும் என்ற எண்ணமும்
இந்த முயற்சியில் ஈடுபட வைக்கவில்லை.
6) அமெரிக்க தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் கற்க விசேடப் பயிற்சி ஏதும் தருகிறீர்களா?
அமெரிக்கத் தமிழ்க் குழந்தை ... : அமெரிக்க மண்ணில்
அன்றாடம் கற்பிக்கப்படும் பயிற்சி மொழியென தமிழ்
அமையும் காலம் வரும் வரை, பண்பாட்டு மொழியென்ற
வகையில் கற்பிப்பதால், சிறார்களிடையே அதிக
அழுத்தம் சேரா வண்ணம், அவர்கள் அச்சத்துடன்
மருண்டு ஓட வண்ணம் கற்பிப்பதையே முதன்மை
நோக்கமாகக் கொண்டு தற்போது பள்ளிகளை
இயக்குகிறோம்.
ஆர்வம் கூட்ட தமிழில் தட்டச்சு, மின்னஞ்சல்,
வலைப்பூக்கள் போன்ற பயிற்சி கொடுப்பதில்
ஈடுபட்டுள்ளோம்.
7) அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் குடும்பங்களில் தமிழ் கற்க விரும்பும் கல்லூரி நிலைமாணவர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் திட்டம் உண்டா?
அமெரிக்காவில் வசிக்கும் ... : ஆரம்பம், வார இறுதி
தமிழ்ப்பள்ளிகள் என்றாலும், அதிக அளவில்
தமிழ்ப்பள்ளிகள் உள்ள இடங்களில் (அமெரிக்க
உயர்நிலைப்பள்ளி மாவட்டங்களில்)
உயர்நிலைப்பள்ளிகளில்
தமிழ் ஒரு பாடம் என்பதை செயலாக்க முயற்சி
முன்னுள்ளது.
அது போன்றே தமிழில் மேற்பயிற்சி
பெற தமிழ்மண்ணில் அமைந்துள்ள கல்லூரிகளை
அணுகும் எண்ணமும் உண்டு. கல்லூரி நிலை
மாணவர்க்கு தமிழ்க்கல்வி என்ற நோக்கில்
அமைந்ததுதான் "பெர்கிலி" தமிழ் இருக்கை!
பொருளாதார வசதி என்ற கட்டுப்பாட்டில்
மற்றும் பல பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்துவது
தற்போது நிறைவேறவில்லை.
காலம் கனியும் போது இவையும் சாத்தியமே!
"தமிழ் செம்மொழி" என்ற நிலையும் இதற்கு
பெரிதும் உதவும் என்ற நம்பிக்கை
பெரிதும் உண்டு.
8) தமிழில் மேற்பயிற்சி பெற
தமிதமிழ்மண்ணில் அமைந்துள்ள
கல்லூரிகளை அணுகும் எண்ணம் உள்ளதாக
தெரிவித்தீர்கள்.
இப்போது தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
மேற்படிப்புகளை அளிக்கிறதே!
இதன்மூலம் வெளிநாடு வாழ் தமிழர்கள்
குழந்தைகள் உயர் கல்வி தமிழில் பெற உள்ள
வசதியைப் பயன்படுத்தலாமே!
நீங்கள் குறிப்பிட்டது போல் தமிழ் இணையப்
பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அமைப்பாகும்.
அய்யா திரு. குழந்தைசாமி அவர்களிடம் உள்ள
நேரிடைத்தொடர்பு இதற்கு ஏதுவாகலாம்.
9) முதன் முதலில் தமிழ் குழந்தைகளுக்கு தமிழைக்
கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்ட
போது முதல் பள்ளியை எங்கு துவங்கினீர்கள்? அதன்
பிறகு எப்படி? எங்கெங்கு தமிழ் பள்ளிகளை துவங்கி
இப்போது எத்தனை பள்ளிகள் நடந்துவருகிறது?
1987 சிகாகோவில் சிறார்களுக்கு மீண்டும்
(80 ஆரம்பத்தில் எடுத்த முயற்சி நிலைக்கவில்லை)
தமிழ் கற்பிக்க வேண்டுமென்ற எண்ணம் இங்குள்ள
தமிழ் ஆர்வலர்கள் திரு. இராம்மோகன், இளங்கோ,
விசுவநாதன், திருவாட்டி. கண்ணகி, கலைச்செல்வி, மீனா
ஆகியோருக்குத் தோன்றியதன் காரணமாக வடமேற்கு
பல்கலைக்கழக வளாகத்தில் நண்பர் பாலசந்தர்
உதவியுடன் முதல் தமிழ்ப்பள்ளி துவங்கியது.
இரண்டாவது தமிழ்ப்பள்ளி லகிரேஞ்சில் நண்பர் திரு.
இளங்கோவின் முயற்சியால் 1988 ஆரம்பிக்கப்பட்டது.
இப்பள்ளி பின்னர் இன்சுடேலுக்கு மாற்றப்பட்டது. பின்னர்
1996ல் டேரியனில் "உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை"
ஆதரவுடன் இயங்க ஆரம்பித்தது.
2002, 2003 ல் மாணாக்கர்
எண்ணிக்கை அதிகமாகியதலும், பெற்றோர்க்கு பயணச்சுமை குறைக்கவும் சாம்பர்க், நேப்பர்வில், மன்சுடர், கெர்ணி,
டெசுபிளெய்ன்சு, மில்வாக்கி போன்ற இடங்களில்
தமிழ்ப்பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன.
2006ல் சாம்பென்சு,புளூமிங்டனிலும் தமிழ்ப்பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டு
தற்போது ஒன்பது தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இன்று ஒரு பதிவு செய்யப்பட்ட 501(C)(3) அமைப்பாகவே
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் (Thamizh Schools USA, Inc.,) இயங்கி வருகின்றது.
10) உங்கள் கருத்துக்கு ஒத்த எண்ணத்தோடு உடன் வந்தவர்கள்
குறித்து உங்களுக்குள் மலரும் நினைவுகள் இருக்கும்.
அவர்கள் குறித்துப் பகிர்ந்துகொள்ள இயலுமா?
எதனையுமே ஆரம்பிப்பது என்பது கடினம்தான்
என்றாலும், அதனை நிலையாக முன்நோக்கி
நடத்திச்செல்வது என்பது, ஒரு வேள்வி என்றே
கூறவேண்டும்.
நான்கு, ஐந்து நண்பர்கள் முன்
நின்று ஆரம்பித்து இன்று தமிழ்த்தொண்டு என்ற
எண்ணத்தில் பலரால் (கிட்டதட்ட 40 ஆசியர்களாலும், உதவியாளர்களாலும்) தொடர்ந்து நடத்தப் படுகிறது.
நினைவுகளை, நிகழ்வுகளாக மாற்றுபவர்கள் பலர்,
இதில் யாவுமே பசுமைதான்! வாழ்வில் தமிழால்
அமைவன யாவுமே பசுமைதான்!
11. இதுவரை சாதித்தது என்ன? இனி சாதிக்கப்போவது என்ன?
இதுவரையும் சாதித்தது அணுவளவு!
இனி சாதிக்க உள்ளது
காலம்தான் பதில் கூறும்.
12) தமிழ் பள்ளிகள் ஆங்காங்கே துவக்குவது தவிர மற்றபடி
தங்கள் பொதுப்பணிகளில் உள்ள ஈடுபாடு குறித்துச்
சொல்லுங்களேன்?
இந்த மண்ணில் முதல் தலைமுறையாக
காலூன்றியவர் யாவர்க்குமே பொதுப்பணிகள்
பெரும் பொறுப்பு!
இனம், மொழி, பண்பாடு,
கலை என யாவற்றிலும் நாம் நிலையாக
இந்த மண்ணில் ஊன்றிட 1986ல் ஆரம்பித்த
பணி தொடர்கின்றது, என்று முடியும், எந்த
அளவில் முடிந்தன என்பதை இனிய மூச்சு
காற்றோடு கலந்த பின் வரும் காலம் சொல்லும்.
13) இந்தப் பொதுப்பணிகளில் உங்கள் மனது மகிழ்ந்த/நிறைவான சம்பவம் என்று ஒன்றைக் குறிப்பிட்டுக்கூற முடியுமா?
"தீதும் நன்றும் பிறர் தர வாரா ... இனிதென
மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின் இன்னாது
என்றலும் இலமே!" யாவுமே நிறைவுதான்!
14)பொதுவாக வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நீங்கள்
தெரிவிக்கும் செய்தி என்ன?
தமிழ் உணர்வு நம்மோடு உறைந்திடல் வேண்டும்.
"தமிழ் உயர தமிழால் நாம் உயர்வோம்"
15) அமெரிக்காவில் தமிழ் பள்ளி துவங்க யாரேனும் முன்வந்தால் நீங்கள் தரும் ஆலோசனை என்ன?
என்றும் எதிர் நோக்கும் உதவிகள் உண்டு.
தொடர்புகளை வரவேற்க "அன்னை இல்லம்"
annaiillam@hotmail.com
annaiillam2004@yahoo.com,
thamizhppalli2003@yahoo.com என்றுமே காத்துள்ளது.
No comments:
Post a Comment